முதல் பருவம் அலகு -2 வினா விடை

    குறுவினாக்கள்

    • உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்கும் மொழி எது?
      • உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்கும் மொழி தமிழ் ஆகும்.
    • “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே….” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
      • கல்தோன்றி மண்தோன்றா காலத்தே …. என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறப்பொருள் வெண்பாமாலைஆகும்.
    • தமிழின் பழமை குறித்த புறப்பொருள் வெண்பாமாலை பாடல் வரிகளை எழுதுக.
      • தமிழின் பழமை குறித்த புறப்பொருள் வெண்பாமாலை பாடல் வரி “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்பதாகும்.
    • சங்க இலக்கியத்தின் வேறு பெயர்களை எழுதுக.
      • சங்க இலக்கியத்தின் வேறு பெயர்கள் பாட்டுதொகை, பதினெண்மேல்கணக்கு என்பதாகும். பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும்.
    • எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை எழுதுக.
      • எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என்பதாகும்.
    • நற்றிணையின் பெயர்க்காரணம் கூறுக.
      • நல்ல திணை’ என்பது நற்றிணை என்றழைக்கப்படுகிறது.
    • நற்றிணை குறிப்பு வரைக.
      • நல்ல திணை’ என்பது நற்றிணை என்றழைக்கப்படுகிறது.
      • 9 அடி முதல்  12 அடி வரையுள்ள 400 பாடல்களைக் கொண்டுள்ளது.
      • நற்றிணை நானூறு என்று அழைக்கப்படுகிறது.
      • தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார்.
    • “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
      •   “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் கபிலர் ஆவார்.
    • “நின்ற சொல்லர்….” எனத் தொடங்கும் பாடலின் திணை, துறை குறித்து எழுதுக. (அல்லது) நற்றிணையில் உங்கள் பாடப்பகுதியாக அமைந்துள்ள பாடலின் திணை, துறை குறித்து எழுதுக.
      • திணை: குறிஞ்சி,
      • துறை: பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது.
    • “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடல் யாருடைய கூற்று?
      • “நின்ற சொல்லர்…..” எனத் தொடங்கும் பாடல் தலைவி  கூற்று ஆகும்.
    • சாந்தில் தொடுத்த தீம்தேன் போன்றது எது? 
      • சாந்தில் தொடுத்த தீம்தேன் போன்றது  தலைவன் தலைவி மீது கொண்ட நட்பு ஆகும்.
    • குறுந்தொகை குறிப்பு வரைக.
      • பெயர்க்காரணம்: குறுகிய அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
      • அடிவரையறை: 4-8
      • பாடல் எண்ணிக்கை: 4௦௦
      • வேறுபெயர்: நல்ல குறுந்தொகை
      • தொகுத்தவர்: பூரிக்கோ
    • நிலத்தினும் பெரியது எது?
      • தலைவன் மீது தலைவி கொண்ட நட்பானது நிலத்தைவிடப் பெரியது.
    • வானைவிட உயர்ந்தது எது?
      • தலைவன் மீது தலைவி கொண்ட நட்பானது வானைவிட உயர்ந்தது.
    • கடலைவிட ஆழமானது எது?
      • தலைவன் மீது தலைவி கொண்ட நட்பானது கடலைவிட ஆழமானது.
    • நிலத்தினும் பெரிதே எனத் தொடங்கும் பாடல் யாருடைய கூற்று? ஆசிரியர் யார்?(அல்லது) பாடியவர் யார்?
      • நிலத்தினும் பெரிதே எனத் தொடங்கும் பாடல் தலைவி கூற்று
      • நிலத்தினும் பெரிதே எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் தேவகுலத்தார்
    • ஐங்குறுநூறு குறித்து எழுதுக.
      • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: அகம்
      • அடிவரையறை : 3-6
      • பாடல் எண்ணிக்கை: 500
      • பாடிய புலவர்கள்: 5
    • “வாழி ஆதன் வாழி அவினி…” எனப் பாடியவர் யார்? யாருடைய கூற்று?
      • “வாழி ஆதன் வாழி அவினி…” எனப் பாடியவர் ஓரம்போகியார்
      • “வாழி ஆதன் வாழி அவினி…” என்றப் பாடல் தோழி தலைவனிடம் கூறியது.
    • கலித்தொகை குறிப்பு வரைக.
      • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: அகம்
      • பாடல் எண்ணிக்கை: 150
      • பாடிய புலவர்கள்: 5
    • “சுடர்த்தொடீஇ கேளாய்…..” எனத்தொடங்கும் பாடல் யாருடைய கூற்று?
      • “சுடர்த்தொடீஇ கேளாய்…..” எனத்தொடங்கும் பாடல் தலைவி கூற்று
    • புறநானூறு குறிப்பு வரைக.
      • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: புறம் 
      • பாடல் எண்ணிக்கை – 400
      • வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு
    • “தெண்கடல் வளாகம்….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
      • “தெண்கடல் வளாகம்….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்
    • முல்லைப்பாட்டு குறித்து எழுதுக.
      • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
      • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
      • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
      • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.

    நெடுவினாக்கள்

    • நற்றிணைப் பாடலின் பொருளினை எழுதுக. (அல்லது) “நின்ற சொல்லர் …” எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக. (அல்லது)நற்றிணை தலைவி கூறும் தலைவனின் நட்பு குறித்து எழுதுக. 

    நற்றிணை

      • பாடுபொருள்: அகம்
      • அடிவரையறை : 9-12
      • பாடல் எண்ணிக்கை: 400
      • பாடிய புலவர்கள்:175
      • வேறுபெயர்: நற்றிணை நானூறு
      • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
      • திணை – குறிஞ்சி
      • பாடியவர் கபிலர்
      • கூற்று – பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
      • கூற்று விளக்கம் பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி தலைவன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்எனத் தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

    பாடலின் விளக்கம்

            “தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர். நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர். எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர். அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம் அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல மாட்டார்என்று தலைவி கூறுகின்றாள்.

    குறிப்பு

    இப்பாடலில், தாமரைத் தாது தலைவன் உள்ளத்தையும், சந்தனத்தாது தலைவியின் உள்ளத்தையும் குறிப்பிடுகின்றது. சந்தன மரத்தில் இனிய தேனடை வைத்தது போலத் தலைவன் தலைவியிடம் அன்பு வைத்துள்ளான் என்பது கருத்து.        

    • குறுந்தொகை பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) “நிலத்தினும் பெரிதே…” எனத்தொடங்கும்பாடலின் பொருளினை எழுதுக.

    குறுந்தொகை

      • நல்ல குறுந்தொகை
      • பாடுபொருள்: அகம்
      • அடிவரையறை : 4 – 8
      • பாடல் எண்ணிக்கை: 400
      • தொகுத்தவர்: பூரிக்கோ
      • திணை குறிஞ்சி
      • பாடியவர் தேவகுலத்தார்
      • துறை – தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
      • துறை விளக்கம் தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

    பாடல் விளக்கம்

      • எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானதுஎன்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.
    • ஐங்குறுநூறு பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) “வாழி ஆதன் வாழி அவினி….”எனத்தொடங்கும்பாடலின் பொருளினை எழுதுக.

    ஐங்குறுநூறு

      • ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் குறைந்த அடிகளைக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குவதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: அகம்
      • அடிவரையறை : 3-6
      • பாடல் எண்ணிக்கை: 500
      • பாடிய புலவர்கள்: 5
      • திணை – மருதம்
      • பாடியவர் – ஓரம்போகியார்
      • கூற்று – புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, “இது தகாதுஎனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு தலைவியோடு கூடி ஒழுகா நின்ற தலைமகள் தோழியோடு சொல்லாடி யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது.
      • கூற்று விளக்கம் – பரத்தையர் உறவில் நெடுநாள் வாழ்ந்த தலைமகன் தன் பிழையுணர்ந்து தன் மனைவியை மீண்டும் கூடினாள். அப்பொழுது தோழியை நோக்கி, “நான் உங்களைப் பிரிந்து வாழும் நாட்களில் நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்?” என வினவினான். அதற்கு விடையாகத் தோழி சொல்லியது.
      • கூற்று – தோழி தலைவனிடம் கூறியது.

    பாடல் விளக்கம்

      • தலைவனே! எம் மன்னனாகிய ஆதன் அவினி நெடிது வாழ்க! எம் நாட்டு வயல்களில் நெல்வளம் சிறக்கட்டும்! நாட்டில் பொன் வளம் பெருகட்டும் என்று விரும்புகின்றாள் எம் தாய் (தலைவி). அரும்புகள் நிரம்பிய புன்னை மரங்களும், முட்டைகளை மிகுதியாகக் கொண்ட சிறுமீன்களும் நிறைந்த ஊரின் தலைவன் வாழட்டும்! அவனுடன் அவன் பாணனும் வாழட்டும் என விரும்புகிறேன் எனத் தலைவி கூறினாள்என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

    குறிப்பு

      • சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்று அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  முதல் வரி மன்னனை வாழ்த்துகின்றது. தோழி, தலைவியைத் தாய் என்று குறிப்பிடுகின்றாள்.
    • கலித்தொகை பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) “சுடர்த்தொடீஇ கேளாய்….” எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.

    கலித்தொகை

      • கலிப்பாக்களால் ஆன பாடல்களைக் கொண்டுள்ளமையால் கலித்தொகை எனும் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: அகம்
      • பாடல் எண்ணிக்கை: 150
      • பாடிய புலவர்கள்: 5
      • பாடியவர்  – கபிலர்
      • திணை  – குறிஞ்சி
      • துறை – புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின்  பகுதிக்கண்தலைவி தோழிக்குக் கூறியது.
      • துறை விளக்கம் – தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால் தான் புகுதற்குத் தகுதியில்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனைத் தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல்.

    பாடல் விளக்கம்

      • ஒளிமிக்க வளையல் அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம் மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும், நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாகக் கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வீட்டில் இருந்தபோது வந்தான். வீட்டின் வாசலில் நின்று, “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்என்று குரல் கொடுத்தான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என் தாய், என்னிடம், “ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவளே. தங்கத்தாலான குவளையில் கொண்டு போய் நீர் கொடுத்து வாஎன்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து இழுத்தான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப் பொருள்) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா? என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான்என்று தன் தோழியிடம் தலைவி கூறுகின்றாள்.
    • புறநானூறு பாடலின் பொருளினை எழுதுக.

    புறநானூறு

      • புறம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டமையால் புறநானூறு எனும் பெயர் பெற்றது.
      • பாடுபொருள்: புறம் 
      • பாடல் எண்ணிக்கை – 400
      • வேறுபெயர்: புறம்,புறப்பாட்டு

    பாடல்:1 

      • பாடியவர்: ஔவையார்
      • திணை: பொதுவியல்.
      • திணை விளக்கம்: வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
      • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
      • துறை விளக்கம்: துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.

    பாடல் விளக்கம்

      • நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) – பள்ளமாக – இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே!

    பாடல்:2

      • பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
      • திணை விளக்கம்வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
      • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
      • துறை விளக்கம்துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்

    பாடல் விளக்கம்

      • இந்த உலகம் முழுவதையும் தனக்கே உரிமை கொண்டு ஆட்சி செய்கின்ற மன்னனாக இருந்தாலும், இரவிலும் பகலிலும் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரிகின்ற கல்வியறிவற்ற வேடனாக இருந்தாலும் இவ்விருவருக்கும் உண்பது, உடுப்பது ஆகிய இரண்டு செயல்களும் பொதுவானதே. இதைப் போன்றே பிற தேவைகளும் பொதுவானதாகவே இருக்கும். இதுவே இயற்கையின் நியதி. ஆதலால், தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவதே வாழ்வின் பயனாகும். அதை விடுத்து, தான் ஈட்டிய செல்வத்தைத் தானே அனுபவிப்பேன் என்று இறுமாப்பு கொண்டு வாழ்ந்தால் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வின் உறுதிப் பொருளை இழக்க நேரிடும் என்று கூறுகின்றார் நக்கீரர்.
    • “தெண்கடல் வளாகம்…” எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக. 
      • பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
      • திணை விளக்கம்வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
      • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
      • துறை விளக்கம்துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்

    பாடல் விளக்கம்

      • இந்த உலகம் முழுவதையும் தனக்கே உரிமை கொண்டு ஆட்சி செய்கின்ற மன்னனாக இருந்தாலும், இரவிலும் பகலிலும் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரிகின்ற கல்வியறிவற்ற வேடனாக இருந்தாலும் இவ்விருவருக்கும் உண்பது, உடுப்பது ஆகிய இரண்டு செயல்களும் பொதுவானதே. இதைப் போன்றே பிற தேவைகளும் பொதுவானதாகவே இருக்கும். இதுவே இயற்கையின் நியதி. ஆதலால், தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவதே வாழ்வின் பயனாகும். அதை விடுத்து, தான் ஈட்டிய செல்வத்தைத் தானே அனுபவிப்பேன் என்று இறுமாப்பு கொண்டு வாழ்ந்தால் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வின் உறுதிப் பொருளை இழக்க நேரிடும் என்று கூறுகின்றார் நக்கீரர்.
    • “நாடா கொன்றோ…..” எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.
    • பாடியவர்: ஔவையார்
    • திணை: பொதுவியல்.
    • திணை விளக்கம்: வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
    • துறை: பொருண்மொழிக்காஞ்சி.
    • துறை விளக்கம்: துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.

    பாடல் விளக்கம்

    நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) – பள்ளமாக – இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே!

    • முல்லைப்பாட்டு கார்கலத்தின் தொடக்கமும் தலைவன் வருகையும் குறித்து எழுதுக.(அல்லது) தலைவன் வரவிற்காக காத்திருந்த தலைவியின் நிலை குறித்து விவரி.

    முல்லைப்பாட்டு

      • பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன.
      • இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.
      • இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
      • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது.
      • மழைப் பொழிவு
        • அலை ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடல் நீரைக் குடித்து எழுந்தது மேகம். அகன்ற உலகை வளைத்தது. வலப்பக்கமாக உயர்ந்தெழுந்தது. மலையில் தங்கியது. மாலைக்காலத்தில் பெருமழையாகப் பொழிந்தது. இக்காட்சி திருமால் வாமன அவதாரம் கொண்டபோது, மாவலிசக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, மாவலி மூன்றடி மண் கொடுக்கும் பொருட்டு வாமனரின் கரங்களில் நீர் வார்த்தார். அந்நீர் வாமனரின் கைகளில் பட்டவுடன் திருமால், விண்ணையும் மண்ணையும் அளக்கும்படி உயர்ந்து எழுந்ததுபோலக் காட்சியளித்தது.
      • தெய்வத்தை வணங்குதல் 
        • மாலைப்பொழுதில் பெண்கள் காவல் கொண்ட பழமையான ஊருக்கு வெளியே உள்ள தெய்வத்தை நோக்கிச் சென்றனர்.  யாழிசை போன்று முரலுகின்ற வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும்படியாக முல்லைப்பூக்கள் மலர்ந்தன. அம்மலர்களையும், நெல்லையும் கொண்டு வந்து தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் எதிர்பார்த்து நின்றனர்.
      • நற்சொல் (விரிச்சி) கேட்டல்
        • ஆயர் மகள் இளங்கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றில் கட்டி வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் கன்றின் கழுத்தைத் தன் கைகளில் அணைத்துக்கொண்டு கோவலர் பின்னிருந்து ஓட்டிக் கொண்டு வர உன் தாய்ப்பசு இப்பொழுதே வந்துவிடும்என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள். இந்நற்சொற்கள் தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது. இதுவே தாங்கள் எதிர்பார்த்த நற்செய்தி என்று மகிழ்வுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.

     

      • தலைவியைத் தேற்றுதல்
        • நற்சொல் கேட்ட பிறகு அப்பெண்கள் யாவரும், போரின் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும் தலைவியை நோக்கிச் சென்றனர். தாங்கள் கேட்ட நற்சொற்களைக் கூறி தலைவன் தான் மேற்கொண்ட வினை முடிந்து பகைவரிடம் திறைப் பொருள் பெற்று விரைந்து வந்து உன்னைச் சந்திப்பார். ஆதலால், நீ உன் மனத்தடுமாற்றத்தால் அடையும் துன்பத்தைப் போக்கிக் கொள்எனப் பன்முறை கூறித் தேற்றினர். அவர்களின் சொற்களைக் கேட்டு மனம் ஆற்றாதவளான தலைவியின் கண்களிலிருந்து முத்துப்போன்ற கண்ணீர்த் துளிகள் விழுந்தன.
      • பாசறையின் அமைப்பு 
        • காட்டாறு பாய்கின்ற முல்லைக் காட்டில், மணம் வீசும் பிடவம்பூச் செடிகள் களையப்பட்டு, வேடருடைய அரண்கள் அழிக்கப்பட்டு, வேட்டையாடும் விலங்குகள் உள்ளே வராத வண்ணம் முள் வேலியை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமாக பாசறை வீடு உருவாக்கப்பட்டது. அது பாடி வீடு என்று அழைக்கப்படும். அவ்வீட்டில் தலைவன் தங்கியிருந்தான்.
      • போர் யானையும் யானைப் பாகனும் 
        • பாசறை அமைக்கப்பட்ட தெருக்களில் உவலைக் கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன. தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த யானைகளுக்குக் கம்பும், கதிரோடு கூடிய நெற்கதிர்க் கட்டுகளும், அதிமதுரத் தழையும் உணவாகக் கொடுக்கப்பட்டன. அந்த யானைகள் அவற்றைத் தன் கைகளால் வாங்கி, உண்ணாமல் அவற்றால் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டன. கையில் அங்குசம் வைத்திருந்த இளைஞர்களான பாகர்கள் யானைகளுக்குப் புரிகின்ற வடமொழிச் சொற்களைக் கூறி அவற்றை உண்ணும்படிப் பயிற்றுவித்தனர்.
      • அரண்
        • தவம் பூண்ட அந்தணர் மூன்று கோல்கள் இணைந்த முக்கோலைக் கையில் வைத்திருப்பர். அந்தக் கோலில் தங்கள் காவி ஆடையைத் தொங்க விடுவர். அதுபோல  போர் வீரர்கள் தங்கள் வில்லினை நிலத்தில் ஊன்றி அவற்றின்மேல் தங்கள் அம்புகள் வைத்திருக்கும் தூணியைத் தொங்க விட்டனர். தங்கள் வேல்களை வரிசையாக நட்டுக் கயிற்றால் இறுகக் கட்டிக் கூடாரம் அமைத்தனர்.  பின்னர் எறிகோல்களை அதன்மீது நட்டு தோலால் ஆன  கருவிகளை வரிசையாகப் பரப்பிப் பிணைத்து இருக்கை அமைத்தனர். இவ்வாறு வில்லால் செய்யப்பட்ட அரணில் தலைவனை அமர வைத்தனர்.
      • அரசனுக்கு அமைத்த பாசறை 
        • பல்வேறு படை வீரர்களின் இருக்கைக்கு நடுவே, வேறு ஒரு தனி இடத்தில் தலைவனுக்கென்று தனிப் பாசறையை அமைத்தனர். பலநிறமுடைய மதில் திரையை வளைத்து அதன் உள்ளே அரசனுக்கு இருக்கை அமைத்தனர். பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.
      • மங்கையர் விளக்கு ஏற்றுதல் 
        • முதுகில் கூந்தல் புரள, கையில் வளையலுடன், தன் கச்சோடு வாளினைச் சேர்த்துக் கட்டிய மங்கையர் அரசனுக்கென்று அமைத்த பாசறையில் உள்ள பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டனர். நெய் வார்த்து விளக்கேற்றினர். விளக்கின் சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.
      • மெய்க்காப்பாளர் காவல் புரிதல் 
        • நீண்ட நாக்கினை உடைய மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது. புனலிப்பூக்கள் பூத்த சிறு செடிகள், மழைத் தூறலுடன் வீசுகின்ற காற்றில் அசைந்தாடுவதைப் போன்று, தம் தலையைத் துகிலால் மயிர்க்கட்டுக் கட்டியிருக்கும் வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்கள் தூக்க மயக்கத்துடன் ஆடி அசைந்து கொண்டே மன்னனைச் சூழ்ந்து காவலாக நின்றனர். அவர்கள் மெய்ப்பை எனப்படும் சட்டை அணிந்திருந்தனர்.
      • நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல் 
        • பிழையின்றி காலத்தைக் கணிக்கும் நாழிகைக் கணக்கர் மன்னனைத் தம் கையால் தொழுது வணங்கினார். மன்னனை வாழ்த்திவிட்டு கடல் சூழ்ந்த உலகத்தை வெல்ல வந்தவரே உன்னுடைய நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இதுவே. காண்பாயாகஎன்று மன்னனுக்கு அறிவிக்கின்றார். (நாழிகை வட்டில் வட்டிலில் நீரிட்டு ஒரு சிறு துளை வழியாக அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசிய விட்டு அந்நீரை அளந்து காணும் கருவி)
      • யவனர் செயல் 
        • வலிமையான கயிற்றால் திரைகள் இழுத்துக் கட்டப்பட்ட அரசனின் பாசறையில் உள் அறை, புற அறை என இரண்டு அறைகள் இருந்தன. அவை புலிச் சங்கிலியால் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. உள் அறையாகிய பள்ளி அறையில் அரசன் படுத்திருந்தான். அவனருகில் வாய் பேச முடியாத ஊமை வீரர்கள் பாதுகாவலுக்காக நின்றனர். அவர்களின் தோற்றம் அச்சம் கொள்ளத்தக்கதாக இருந்தது. மடங்கிப் புடைத்துத் தோன்றும்படி நெருங்கிக் கட்டின ஆடை அணிந்திருந்தனர். அவ் ஆடைமேல் குதிரைச் சவுக்கு வளைந்து கிடக்கிறது. வலிமை மிக்க உடம்பில் தங்கள்  உடம்பில் சட்டை அணிந்திருந்தனர். பாசறையின் மணி விளக்கை எரிய வைத்துக் கொண்டிருந்தனர்.
      • மன்னன் நிலை 
        • மன்னன் ஒரு கையைப் படுக்கை மேல் வைத்து, கடகம் அணிந்த மற்றொரு கையால் தலையைத் தாங்கியவனாய் உறக்கம் கொள்ளாமல் இரவு முழுவதும் முன்நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளை நினைத்தவனாய்ப் படுத்திருந்தான். 
        • போரில் பகைவர் எறிந்த வேல் உடலைக் கிழித்தமையால் புண் மிகுந்து தம் பிடி யானைகளை மறந்து நின்ற களிறுகளை நினைக்கின்றான். 
        • அடிபட்ட பாம்பு துடிப்பதைப்போல களிறுகள் தம் வெட்டுப்பட்டுக் கைகளை இழந்து வருந்தும் காட்சியை நினைக்கின்றான்.
        • தாம் அணிந்த வஞ்சி மாலைக்கு வெற்றியைத் தேடித் தந்து, செஞ்சோற்றுக் கடன் தீர்த்து போரில் இறந்த வீரரை நினைக்கின்றான்.
        • கூர்மையான அம்பின் நுனிகள் தோலில் பாய்ந்ததால் வலி பொறுக்காது தம் செவியைச் சாய்த்துப் புல் உண்ண இயலாமல் வருந்தும் குதிரைகளை நினைக்கின்றான். இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டே உறக்கம் கொள்ளாமல் தவிக்கின்றான்.
      • பாசறையில் வெற்றி முழக்கம் 
        • மறுநாள் போரில், படைக்கருவியால் பகைவரை வென்று வெற்றி தேடித் தந்த போர் வீரர்கள் பகை மன்னர்கள் நடுங்கும்படி வெற்றி முரசை முழங்கினர். பாசறையில் அவ்வெற்றி முழக்கத்தைக் கேட்டுக் கொண்டே வினை முடித்த மனநிறைவோடு இனிதாகத் துயில் கொள்கின்றான் மன்னன்.
      • தலைவியின் துயரம்
        • பாவை விளக்குகள் ஒளி வீசும் உயர்ந்த ஏழடுக்கு மாளிகையில் அமர்ந்திருக்கும் தலைவி தலைவனின் பிரிவை ஆற்றாதவளாய் மனம் வருந்துகின்றாள்.  நான் வரும் வரை பிரிவை ஆற்றியிருஎனக் கூறிச் சென்ற தலைவனின் சொல்லை மீறுவது கற்பிற்கு இழுக்காகும் என்று தம் மனத்தைத் தேற்றுகின்றாள். எனினும், பிரிவாற்றாமையால் வருத்தம் கொண்டு மீண்டும் தலைவனை எண்ணி மயங்குகின்றாள். பிரிவின் துயரால் உடல் மெலிந்து போனதால் அவள் அணிகலன்கள் கழண்டு விழுகின்றன. அம்பு தைத்த மயில்போல நடுங்கி நிற்கிறாள். மழைநீர் கூரை மேல் அருவி போன்று விழுகின்ற ஓசையைக் கேட்டவாறு நெஞ்சம் ஆற்றுகின்றாள். அப்போது அவள் காதுகளில் தலைவன் வரும் ஆரவார ஓசை கேட்டது.
      • அரசன் மீண்டு வருதல் 
        • பகைவரை வென்று அவர்தம் நிலங்களைக் கவர்ந்து திரண்ட படையோடு வெற்றிக் கொடி உயர்த்தி ஊது கொம்பும் சங்கும் முழங்க வருகின்றான் தலைவன்.
      • மழையால் செழித்த முல்லைநிலம்
        • அரசன் வரும் வழியில் காயா மலர்கள் மலர்ந்திருக்கின்றன. கொன்றை மலர்கள் பூத்திருக்கின்றன. வெண் காந்தள் மொட்டுக்கள் விரிந்திருக்கின்றன. தோன்றி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. முல்லை நில வழியில் பருவ மழை பெய்த காரணத்தால் நன்கு விளைந்த கதிர்கள் காணப்படுகின்றன. அதனருகில் கொம்புகள் கொண்ட இரலை மான்களுடன் (ஆண்) மடப்பம் பொருந்திய மான்கள் (பெண்) துள்ளி குதித்து விளையாடுகின்றன. மழை மெதுவாகப் பொழிந்து கொண்டிருந்தது.
      • தேர் வருகை 
        • வள்ளிக்கிழங்கு முதிர்ந்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனது தேர்க்குதிரைகளைத் தேரோட்டி விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். அந்த ஓசைகளால் தலைவியின் காதுகள் குளிர்ந்து மகிழ்ந்தன.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    wpChatIcon
    error: Content is protected !!