முதல் பருவம் அலகு-5 பாடக்குறிப்புகள்

அலகு – 5 பக்தி இலக்கியம்

திருநாவுக்கரசர்

  • இயற்பெயர்: மருள் நீக்கியார்
  • பெற்றோர் : புகழனார், மாதினியார்
  • அக்கா : திலகவதியார்
  • பிறந்த ஊர்: திருவாமூர்
  • இவர் பாடியவை4,5,6 திருமுறைகள்
  • சிறப்பு பெயர்கள்:
    • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
  • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர்தமக்கை திலகவதியார்

பாடல் விளக்கம்

  • மலர் போன்ற சிவபெருமானின் திருவடிகளை அடைக்கலமாக அடைந்தமையால், நாம் யாருக்கும் அடிமையாவதில்லை. மரணத்தைத் தருகின்ற இயமனுக்கு அஞ்சுவதில்லை. நரகத்தில் புகுந்து துன்பமடைவதில்லை. பொய்யும் புரட்டும் இனி நம்மை அணுகுவதில்லை. என்றும் ஆனந்தமாக இருப்போம். நோய் என்பதையே அறியாது இருப்போம். வேறு யாரையும் பணிந்து நிற்க மாட்டோம். எந்நாளும் நமக்கு இன்பமே ஏற்படும். துன்பம் என்பதை நாம் அறிய மாட்டோம். யாருக்கும் அடிமையாகாதவனும், வெண்குழையைக் காதில் அணிந்த அரசனாகிய ஆதி சங்கரனுக்கு மட்டுமே நாம் அடிமையாக இருப்போம் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.

மாணிக்கவாசகர்

  • இயற்பெயர் தெரியவில்லை
  • பெற்றோர் : சம்புபாதசாரியார்சிவஞானவதி
  • இவர் பாடியவை8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

  • அருள் வாசகர்
  • மணிவாசகர்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • தென்னவன் பிரமராயர்
  • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

பாடல் விளக்கம்

  • திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
  • மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெல்க; பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் வெல்க; தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் வெல்க; கை குவித்து வணங்குவோர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெல்க; கைகளைத் தலைமேல் உயர்த்தி வணங்குவோரை வாழ்வில் உயரச் செய்கின்ற சிறப்புடையவனது திருவடி வெல்க என்று இறைவனின் திருவடிகளை வாழ்த்துகின்றார் மாணிக்கவாசகர்.

 

முதலாழ்வார் மூவர்

  • வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் எனப் போற்றப்படுகின்றனர்.

பொய்கையாழ்வார்

  • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்பொய்கையில் அவதரித்தவர்,
  • காலம் : 7ம்நூற்றாண்டு
  • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

  • பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாகஎன்று வேண்டுகின்றார்.

பூதத்தாழ்வார்

  • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
  • காலம் :  7ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

  • பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாகஎன்று வேண்டுகின்றார்.

பேயாழ்வார்

  • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
  • காலம்: ஏழாம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
  • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

  • பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்என்று மனமுருகிப் பாடுகின்றார்.

ஆண்டாள்

  • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
  • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
  • காலம் : 9ம் நூற்றாண்டு
  • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
  • பாடிய பாடல் : 173

திருப்பாவை – முதல் பாடல்

பாடல் விளக்கம்

  • அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

பகுத்தறிவு இலக்கியம்

திருமந்திரம் – திருமூலர்

  • திருமூலர் 63 நாயன்மார்களுள்  ஒருவரும், பதினெண் சித்தர்களுள்  ஒருவரும் ஆவார். எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். இவர் இயற்றிய திருமந்திரத்தைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.  இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில் (இயல்கள்) மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளதுஎன்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். 
  • வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

அன்புடைமை

பாடல் விளக்கம்

  • அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.
  • பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். வானில் மின்னுகின்ற பிறைச் சந்திரனைத் தன் சடை முடியில் சூடியிருப்பவன். சுடுகாட்டில் எஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடி போல திருமேனி எங்கும் பூசிக் கொள்பவன். அநதச் சாம்பலின் பொடி மீது திருநடனம் ஆடுகின்றவன். அப்படிப்பட்ட இறைவனிடம் நான் கொண்டுள்ள அன்பும், இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பும் இரண்டறக் கலந்துள்ளது.
  • உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உடலை விட்டு உயிர் பிரியும் முன்பே அனைத்து உயிர்களின் மீதும் அன்பை செலுத்தி, அதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். அப்படிச் செய்தால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் கொடுத்து இறைவன் நம்மோடு  இருப்பார்.
  • தானே சுயமாகத் தோன்றியவன். தம்மை அன்போடு வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் வரை அவர்களோடு வழித்துணையாக வருபவன். கொன்றை மலர்களைத் தன் இடப்பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவன். அப்படிப்பட்ட சிவபெருமான் பேரன்பின் உருவமாக என்னுடன் கலந்து நிற்கின்றான்.
  • கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை நான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையைக் கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக் கொண்டனின் அழகிய கழல்களை நான் கண்டு கொண்டேன். தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருடிகளை நான் கண்டு கொண்டேன். இறைவன் மீது நான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பு உருவமாக நிற்கின்ற சிவனின் திருமேனியை நான் கண்டு கொண்டேன்.

பட்டினத்தார்

  • இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.

திருவிடைமருதூர்

பாடல் விளக்கம்

  • உள்ளத்தில் ஒழுக்கம் இல்லாமல் முற்றும் துறந்து விட்டேன் என்று பொய் பேசிக் கொண்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை. அவை யாவும் மற்றவர்களுக்காக போடப்படும் வேஷம்தான். ஆனால் இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் ஒழுக்கமாக இருப்பவனே இறைவனின் திருவடியை அடைவான். பேரின்பத்தைப் பெறுவான்.
  • வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவார். நம் வாழ்வின் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவார். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும் பகையாவார். உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர். இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும் சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும் துணையாக இருக்கும். என் நெஞ்சே! அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு இந்த உலகத்தின் ஆசைகளில் இருந்து விடுதலை தரும்.

கடுவெளிச்சித்தர்

  • கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.

பாடல் விளக்கம்

  • மனமே! உயிர்களைத் துன்புறுத்தும் பாவச் செயலைச் செய்யாதே. அப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் எமன் உன் மீது கோபம் கொண்டு உயிரைக் கொண்டு சென்று விடுவான்.
  • ஒருவரை துன்பம் தரும் வார்த்தைகளால் சபிக்கக் கூடாது. சபிப்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட விதியை உன் சாபத்தால் மாற்ற முடியாது. எனவே கோபம் கொள்ளாதே! ஆசையைத் தூண்டுகின்ற எண்ணத்தைத் தூண்டாதே.
  • சூது என்பது சூதாட்டம். பொய் என்பது இல்லாத ஒன்றை உண்டு என்றும், உள்ளதை இல்லை என்றும் கூறுவதாகும். மோசம் என்பது பிறர் பொருளை அபகரிப்பதாகும். இவை மூன்றும் மனித வாழ்வைச் சீர்குலைக்கும். இவற்றைச் செய்பவர்கள் நரகத்தை அடைவார்கள், உறவுகள் அவர்களை விட்டுப் பிரிவார்கள். எனவே இறைவன்பால் பக்தி கொண்டு, செய்ந்நன்றி மறவாமல், அனைவரிடமும் நட்பு கொண்டு வாழ வேண்டும்.
  • தண்ணீரின் மேல் நீர்க்குமிழி தோன்றி உடனே அழிந்துவிடும். அதுபோல நம் உடலும் தோன்றியவுடன் அழிவது உறுதி. இந்த உண்மையை உணர்ந்து இந்த உலகின் மேல் பற்று இல்லாமல் இருப்பதே சிறந்தது.
  • ஓர் ஆணும் பெண்ணும் இறைவனை (குயவன்) வணங்கினர். அவர்களின் வேண்டுதலுக்கிணங்கி ஒரு குழந்தையை (தோண்டி) இறைவன் கொடுத்தார். அக்குழந்தையைப் பராமரிக்க மறந்து அதன் தந்தை ஆடிய ஆட்டத்தால் அந்தக் குழந்தை இறந்து விட்டது. எனவே இந்த உடல் அழிகின்ற தன்மை உடையது என்று உணர்ந்து இறைவனை வணங்க வேண்டும்.
  • யாரையும் இழிவாகப் பேசுதல் கூடாது. பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை என்ற மூன்றும் பொல்லாதவை. இவற்றை விட்டு விட வேண்டும். சிவனை அன்பு கொண்டு வணங்கினால் எமன் நம்மை நெருங்குவதில்லை.
  • நன்மையான வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். எந்நேரமும் இறைவனை நினைத்திருக்க வேண்டும். அறிவுள்ள பெரியோருடன் கூடியிருக்க வேண்டும். வள்ளலாகிய இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • உத்தமர்களான பெரியோர்களின் உறவைக் காத்துக் கொள்ள வேண்டும். தருமங்கள் முப்பத்திரண்டையும் தவறாது செய்ய வேண்டும். தீமையானவற்றைப் பின்பற்றாது இருக்க வேண்டும். பொய் பேசுதல், கோள் சொல்லுதல் இவற்றை நீக்க வேண்டும்.
  • வேதங்களில் கூறப்பட்டுள்ள நன்மையான வழிகளைப் பின்பற்ற வேண்டும். பெரியோர்கள் காட்டிய வழிகளில் விருப்பமுடன் செல்ல வேண்டும். மன அமைதி தரும் வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும். கொடுமையான கோபத்தை அழிக்க வேண்டும்.
  • ஒரு பொருளையும் பிறரிடம் இருந்து இரவாமல் வாழ வேண்டும். பெண்களின் மீது ஆசை கொண்டு அழிந்து போகாமல் நம்மைக் காக்க வேண்டும். இறைவனின் மீது பற்று கொண்டு மனம் மாறாமல் பக்தியுடன் செயல்பட வேண்டும்.
  • மெய்ஞ்ஞானப்பாதையாகிய அட்டாங்க யோகம் பயில வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றைப் பயிலுதல் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும். இவற்றைக் கற்றால் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம்.

இராவண காவியம்

  • இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் – என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.

தாய்மொழிப்படலம்

பாடல் விளக்கம்

  • இராவணனின் இலங்கை சிறப்புகள் பல பொருந்திய நாடு. கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு. அந்நாட்டில் கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது. இயல், இசை கற்காதவர் அந்த நாட்டில் இல்லை. தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை. கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை. தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை. நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று அந்நாட்டின் சிறப்பு கூறப்படுகின்றது.
  • அந்நாட்டு மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர். தமிழ் தங்களின் இரு கண்களில் இருந்து வருகின்ற பார்வை என்றும், மானத்தைக் காக்கின்ற போர்வை என்றும், உயிரைக் காக்கும் கருவி என்றும், உள்ளத்தின் சிந்தனை என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும் மதித்து தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.
  • அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன. வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன. கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின. வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன. திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன. வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.
  • தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை. கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை. செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை. நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.
  • தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.

நாடெல்லாம் புலவர் கூட்டம் நகரம் எல்லாம் பள்ளி ஈட்டம்

  • புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியையும் தமிழ் பற்றாளர்களின் சீரிய முயற்சியின் காரணமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ள நிலையினை பற்றி கூறும்போது,  “நற்றமிழாகிய தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளதால், இங்குள்ள மக்களின் கைகளில் ஏடுகள் ஆகிய புத்தகங்கள் இல்லாமல் இல்லை. இங்கு இயல் இசை கல்லாதவர்கள் இல்லை. பாடும் புலமைப் பெறாதவர்கள் இல்லை. பள்ளிக்குச் சென்று நல்லறிவு பெறாதவர்கள் இல்லை” எனக் கூறுகிறார்.
  • மேலும் தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்கள், தமிழ் மொழியைத் தங்கள் இருவிழிகளாகப் போற்றினர். அவர்கள் பார்வைக்குத் தெரிந்தது அனைத்தும் தமிழ் உருவங்களாக விளங்கின. அவர்களுக்கு தமிழ் மொழியே காப்பாக அமைந்தது. அவர்கள் தமிழ் மொழியை தனது உரிமையாக கருதி வாழ்ந்தார்கள். அதன் காரணமாக,

நாடெல்லாம் புலவர் கூட்டம்

நகரெல்லாம் பள்ளி ஈட்டம்

வீடெல்லாம் தமிழ்த்தாய்க் கோட்டம்

விழாவெல்லாம் தமிழ் கொண்டாட்டம்

என்ற நிலையில் தமிழ் மக்களின் வாழ்வோடு தமிழ் மொழி இணைந்து சிறப்படைந்தது.

தமிழ் மொழி பயிலாக்காலே

  • தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழியை கற்கும் நிலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் ” உணவினைப் பெரிதாக எண்ண மாட்டார்கள். பொன்னாளாகிய பட்டாடைகளை விரும்ப மாட்டார்கள். பொன் நகைகளை விரும்பி அணிய மாட்டார்கள். மலர் மாலைகளைச் சூட மாட்டார்கள். இனிமையான இசையினை கொடுக்கும் யாழை மீட்ட மாட்டார்கள். ” என புலவர் குழந்தை கூறுகிறார்.
  • மேலும், தமிழறிந்த சான்றோர்கள் பலர், பாடல்கள் ஏற்றியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் உரைகளை எழுதியும் தமிழ் மொழியினை வளர்த்தார்கள். அவ்வாறு வளர்க்கப்பட்ட செந்தமிழே நம் தாய்மொழி. எனப் புலவர் குழந்தை அவர்கள் தாய்மொழிப் படலத்தில் தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon
error: Content is protected !!