முதல் பருவம் – அலகு -3 வினா விடை

முதல் பருவம்

அலகு-3 அற இலக்கியம்

குறுவினாக்கள்

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் எவையேனும் நான்கினை எழுதுக.
    • திருக்குறள் 
    • நாலடியார்
    • நான்மணிக்கடிகை
    • பழமொழி நானூறு
    • இனியவை நானூறு
  • திருக்குறள் குறிப்பு வரைக.
    • எழுதியவர்: திருவள்ளுவர்
    • முப்பால்: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
    • அதிகாரங்கள்: 133
    • குறட்பாக்கள்: 1330
  • திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் நான்கினை எழுதுக.
    • உத்தரவேதம் 
    • பொய்யாமொழி 
    • வாயுறை வாழ்த்து
    • தெய்வநூல்
    • உலகப் பொதுமறை
    • முப்பால்
    • தமிழ்மறை
  • திருவள்ளுவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் எவையேனும் நான்கினை எழுதுக.
    • முதற்பாவலர்
    • தெய்வப்புலவர் 
    • செந்நாப்போதார்
    • பெருநாவலர்
    • தெய்வப்புலவர்
    • நாயனார்
    • தேவர்
  • அறத்திற்கு பொருந்தாதவை எவை?
    • பொறாமை
    • பேராசை
    • சினம்
    • கொடிய சொல்
  • நாலடியார் குறிப்பு வரைக.
    • எழுதியோர்: சமண முனிவர்கள்
    • தொகுத்தவர்: பதுமனார்
    • பாடல் எண்ணிக்கை: 400
    • வேறுபெயர்: நாலடி நானூறு, வேளாண் வேதம்
  • உண்மையான அழகு எது?  
    • கல்வி அழகே உண்மையான அழகு ஆகும்.
  • மற்ற அழகுகளைவிடச் சிறந்த அழகு என்று நாலடியார் எதைக் கூறுகிறது?
    • கல்வி அழகே மற்ற அழகுகளைவிடச் சிறந்த அழகு என்று நாலடியார்  கூறுகிறது.
  • உண்மையான அழகுகள் ஆகாதவை எவை?
    • தலைமுடியால் ஏற்படும் அழகு
    • பட்டுக்கரையால் ஏற்படும் அழகு
    • மஞ்சள் பூசுவதால் ஏற்படும் அழகு 

ஆகியவை உண்மையான அழகு ஆகாது. 

  • நான்மணிக்கடிகை குறிப்பு வரைக.
    • ஆசிரியர்: விளம்பி நாகனார்
    • பாடல் எண்ணிக்கை: 104
    • பெயர்க்காரணம்: நான்கு மணிகளால் செய்யப்பட்ட அணிகலன் போல பாடல்தோறும் நான்கு கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
  • நிலத்திற்கு அழகு சேர்ப்பவை யாவை?
    • நிலத்திற்கு அழகு சேர்ப்பது நெல்லும் கரும்பும் ஆகும்.
  • குளத்திற்கு அழகு சேர்ப்பது எது?
    • குளத்திற்கு அழகு சேர்ப்பது தாமரை மலர்கள்  ஆகும்.
  • பெண்களுக்கு அழகு சேர்ப்பது எது?
    • பெண்களுக்கு அழகு சேர்ப்பது நாணம்   ஆகும்.
  • நம் ஒவ்வொருவருக்கும் அழகு சேர்ப்பது எது?
    • நம் ஒவ்வொருவருக்கும் அழகு சேர்ப்பது நாம் செய்யும் அறச்செயல்கள் ஆகும்.
  • பழமொழி நானூறு குறிப்பு வரைக.
    • ஆசிரியர்: முன்றுறை அரையனார்
    • பாடல் எண்ணிக்கை:400
    • பெயர்க்காரணம்:  ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனும் பெயர் பெற்றது.
  • முதுசொல் என்பதன் பொருள் யாது?
    • முதுசொல் என்பதன் பொருள் பழமொழி என்பதாகும்.
  • இனியவை நாற்பது குறிப்பு வரைக.
    • ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்
    • பாடல் எண்ணிக்கை:40+1 கடவுள் வாழ்த்து
    • பெயர்க்காரணம்: இவை இவை இனியவை என நாற்பது பாடல்களில் குறிப்பிடுவதால் இனியவை நாற்பது எனும் பெயர் பெற்றது.
  • இளமையை __________உணர்தல் இனிது.
    • இளமையை மூப்பென்று உணர்தல் இனிது.
  • கிளைஞர் மாட்டு __________கேட்டல் இனிது.
    • கிளைஞர் மாட்டு  அச்சின்மை (அச்சமில்லாத) கேட்டல் இனிது.
  • தடமென் பணைத்தோள் தளிரியலாரை __________உணர்தல் இனிது.
    • தடமென் பணைத்தோள் தளிரியலாரை விடமென்று உணர்தல் இனிது.
  • “தடமென் பணைத்தோள் தளிரியலார்” –  யார்?
    • தடமென் பணைத்தோள் தளிரியலார் என்போர் பிறமகளிர் ஆவர்.

நெடுவினாக்கள்

  • அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.

    திருக்குறள்

      • எழுதியவர்: திருவள்ளுவர்
      • முப்பால்: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
      • அதிகாரங்கள்: 133
      • குறட்பாக்கள்: 1330

அறன் வலியுறுத்தல்

  • அறவழியில் வரும் சிறப்பும் செல்வமும் ஒருவருக்குச் சிறந்த பயனைத் தரும். இந்த ஒன்றைத் தவிர ஆக்கம் அளிக்கக்கூடிய வழி வேறொன்றும் இல்லை. 
  • நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
  • செய்யக்கூடிய செயல்கள் எவையாயினும் அறவழியிலேயே செய்யப்பட வேண்டும். 
    • ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

      செல்லும்வாய் எல்லாஞ் செயல்.  

  • மனம் தூய்மையாக இருப்பதே அறம் ஆகும். மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. 
    • மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

      ஆகுல நீர பிற. 

  • பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் நீக்கி வாழ்வதே அறம் ஆகும். 
  • பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
    • அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

      பொன்றுங்கால் பொன்றாத் துணை.

  • அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவையெனக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.
  • பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
    • வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

      வாழ்நாள் வழியடைக்கும் கல்.

  • அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பம் ஆகும். அதற்கு மாறான வழியில் வருவது இன்பம் ஆகாது. 
  • பழிக்கத்தக்க செயல்களைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறச் செயல்களைச் செய்வதே ஒருவருக்குப் புகழ் சேர்க்கும். 
    • செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

      உயற்பால தோரும் பழி. 

  • நாலடியார் பாடலை எழுதி விளக்குக.

நாலடியார்

    • எழுதியோர்: சமண முனிவர்கள்
    • தொகுத்தவர்: பதுமனார்
    • பாடல் எண்ணிக்கை: 400
    • வேறுபெயர்: நாலடி நானூறு, வேளாண் வேதம்

பாடல்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

விளக்கம்

    • நம் தலையில் உள்ள முடிகளைச் சீர்ப்படுத்துவதால் வருகின்ற அழகும், கரையுள்ள ஆடையை அணிவதால் உண்டாகும் அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகின்ற அழகும் உண்மையான அழகல்ல.  மாறாக, அறநெறியில் நடந்து, நடுவுநிலைமையோடு வாழ்கின்றோம் என்ற பெருமிதத்தைத் தருகின்ற கல்வியே உண்மையான அழகாகும். 

  • நான்மணிக்கடிகை பாடலை எழுதி விளக்குக.

நான்மணிக்கடிகை

    • ஆசிரியர்: விளம்பி நாகனார்
    • பாடல் எண்ணிக்கை: 104
    • பெயர்க்காரணம்: நான்கு மணிகளால் செய்யப்பட்ட அணிகலன் போல பாடல்தோறும் நான்கு கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.

பாடல்

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணி
தான்செல் உலகத்(து) அறம்.

விளக்கம்

    • பசுமையாகக் காணப்படும் நெல்லும், கரும்பும் நிலத்திற்கு அழகைத் தருகின்றன. 
    • குளத்திற்குத் தாமரை மலர்கள் அழகைத் தருகின்றன.
    • பெண்மைக்கு அழகு நாணமுடைமை
    • அதுபோல பிறருக்குச் செய்கின்ற அறச் செயல்கள்  ஒரு மனிதனுக்கு அழகைத் தருகின்றன.
  • பழமொழி நானூறு பாடலை எழுதி விளக்குக.

பழமொழி நானூறு

    • ஆசிரியர்: முன்றுறை அரையனார்
    • பாடல் எண்ணிக்கை:400
    • பெயர்க்காரணம்:  ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனும் பெயர் பெற்றது.

பாடல்

தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்
செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது
நின்னடை யானே நடவத்தா நின்னடை
நின்னின் றறிகிற்பார் இல்.

விளக்கம்

    • சிறுமைக் குணமுடையவர் தம் நடத்தையைத் தாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

    • தாம் எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம் என்றும் எண்ணிப் பார்ப்பதில்லை.

    • செம்மையான நன்னடத்தையைக் கடைப்பிடிப்பதில்லை.
      இத்தகைய சிறியார் போல நீ நடந்துகொள்ளக் கூடாது.

    • உன்னுடைய பெருமைக்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்றுக.
      உன்னுடைய நடத்தையை உன்னைத் தவிர வேறு யார் அறிந்துகொள்ள முடியும்?

    • ஆதலால் உன் பெருமைக்கு ஏற்ற நடத்தையை நீதான் பின்பற்ற வேண்டும்.

  • இனியவை நாற்பது பாடலை எழுதி விளக்குக.

இனியவை நாற்பது

    • ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்
    • பாடல் எண்ணிக்கை:40+1 கடவுள் வாழ்த்து
    • பெயர்க்காரணம்: இவை இவை இனியவை என நாற்பது பாடல்களில் குறிப்பிடுவதால் இனியவை நாற்பது எனும் பெயர் பெற்றது.

பாடல்

இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
லிடமென் றுணர்தல் இனிது.

விளக்கம்

    • இளவயதிலேயே முதுமை தருகின்ற மனப்பக்குவம் பெற்றிருப்பது இனிது.  
    • உறவினர்கள் அன்புமொழி கூறுபவராக அமைவது இனிது.
    • மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட பிற மகளிர் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிந்து விட்டு விலகிவிடுதல் இனிது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon
error: Content is protected !!